வெங்கட் பிரபு இயக்கும் பான் இந்திய படம்- கதாநாயகனாகும் கிச்சா சுதீப்..!

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் பான் இந்தியா படத்தில் கிச்சா சுதீப் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் ‘மாநாடு’ படத்தை வெங்கட் பிரபு இயக்கி முடித்துவிட்டார். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது துவங்கி நடைபெற்று வருகின்றன. 

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவிட்டன.

இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. மாநாடு திரைக்கு வந்தவுடன் இப்புதிய படத்திற்கான பணிகளை அவர் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் மற்றும் இந்தியிலும் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த படத்தில் கிச்சா சுதீப் கதாநாயகனாக நடிக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.