ஹாரர் படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் லட்சுமி மேனன்..!!

 

நடிகை லட்சுமி மேனன் கேரளாவைப் பூர்விகமாகக் கொண்ட இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். முதலில் மலையாளத்தில் வெளிவந்த ‘ரகுவிண்டெ சுவந்தம் ரசியா‘ என்ற திரைப்படத்தில் நடித்தார். மேலும் தமிழில் ‘கும்கி‘ படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் ‘சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, மஞ்சப்பை, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன்‘ உள்பட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ‘கும்கி, சுந்தர பாண்டியன்‘ மூலம் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இவர் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென நான் படிக்கப் போகிறேன் என்று கூறிவிட்டு சென்றதால் பட வாய்ப்புகள் குறைந்தன. ‘றெக்க‘ படத்திற்கு பிறகு 5 ஆண்டுகள் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த லட்சுமி மேனன் கடைசியாக ‘புலிக்குத்தி பாண்டி‘ என்ற படத்தில் நடித்தார். இந்த படம் தொலைக்காட்சியில் வெளியானது. தற்போது அவர் யோகி பாபுவுடன் ‘மலை‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் லட்சுமி மேனன் ‘சப்தம்‘ என்ற ஹாரர் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘ஈரம், வல்லினம் ஆறாது சினம், குற்றம் 23‘ படங்களை இயக்கிய அறிவழகன் தயாரித்து, இயக்குகிறார். ஆதி நாயகனாக நடிக்கிறார், மற்றும் தமன் இசையமைக்கிறார். தற்போது இதன் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.