சினிமாவில் இருந்து விலகுகிறேன்: பிரபல நடிகர் ஓய்வு அறிவிப்பு..!

 

தென்னிந்திய சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்ற சந்திரமோகன் திரையுலகில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு, தமிழ் மொழிகளில் தயாரான பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் சந்திரமோகன். நேற்று தனது 81-வது பிறந்தநாளை கொண்டாடிய அவர் செய்தியாளர்களை சந்தித்து தன்னுடைய ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிட்டார்.

கடந்த 1966-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ரங்குல ராட்டினா’ என்ற படத்தில் குணச்சித்திர கதாபாத்திரம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் சந்திரமோகன். தொடர்ந்து இவர் 55 ஆண்டுகளாக தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் எம்.ஜி.ஆர் நடிப்பில் 1975-ம் ஆண்டு வெளியான ‘நாளை நமதே’ என்கிற படத்தில் சந்திரமோகன் தம்பியாக நடித்துள்ளார். மேலும் சில தமிழ் படங்களில் அவர் நடித்தார். எனினும், தொடர்ந்து அவர் தெலுங்கு சினிமாவிலே கவனம் செலுத்தினார்.

இதுவரை 900-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள சந்திரமோகன், கடந்த 2017-ம் ஆண்டு வெலியான ஆக்சிஜன் என்கிற படத்தில் நடித்திருந்தார். இதுதான் அவர் நடித்துள்ள கடைசிப் படம்.

தெலுங்கு சினிமாவில் கொண்டாடப்படும் இயக்குநரான கே. விஸ்வநாத்தின் நெருங்கிய உறவினர் தான் சந்திரமோகன். அவர் தற்போது ஓய்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது டாலிவுட் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.