பொன்னியின் செல்வன் படத்தில் பழம்பெரும் நடிகை..!

 
பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள செம்பியன் மாதேவி கதாபாத்திரத்தில் பழம்பெரும் நடிகை ஒருவர் நடித்துள்ள விபரம் தெரியவந்துள்ளது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக்கி வருகிறார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் நடித்து வந்த இந்த படத்தில் இன்னும் ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களுக்குமான படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துவங்கப்படவுள்ளன. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமான செம்பியன் மாதேவியாக யார் நடிக்கிறார்கள் என்கிற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வந்தது. தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. அந்த கதாபாத்திரத்தில் பழம்பெரும் நடிகையான ஜெயசித்ரா நடித்துள்ள விபரம் வெளியாகியுள்ளது.

1989-ம் ஆண்டு கார்த்தி, பிரபு நடிப்பில் மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் படத்தில் ஏற்கனவே ஜெயசித்ரா நடித்துள்ளார். அதன்படி மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். அதேபோல படத்தின் மற்றொரு முக்கிய கதாபாத்திரமான வீரபாண்டியனாக நாசர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.