ஜெயிலர் படத்தால் அதிரடி முடிவெடுத்த ’மாவீரன்’ படக்குழு..!!

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் மாவீரன் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு மாற்றி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

மண்டேலா படம் மூலம் தேசியளவில் கவனமீர்த்தவர் மடோன் அஸ்வின். இவர் அடுத்து இயக்கி வரும் படம் தான் மாவீரன். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாக நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, சரிதா, புஷ்பா வில்லன் சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு பரஷ் ஷங்கர் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் முடிந்தன.

தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னதாக மாவீரன் படத்தை படக்குழு பக்ரீத் பண்டிகையை முன்வைத்து ஜூன் மாதத்தில் வெளியிட முடிவு செய்திருந்ந்தது. ஆனால் அன்று உதயநிதி நடித்துள்ள ‘மாமன்னன்’ படம் வெளியாகிறது.

இதனால் மாவீரன் ரிலீஸ் தள்ளிப்போனது. அதையடுத்து விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்வைத்து ஆகஸ்டு 11-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்று ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் வெளியாகிறது.

இதனால் மாவீரன் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாக ஜூலை மாதம் மாவீரன் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயிண்டு நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.