நீதிமன்றத்தில் முறையீடு- மீரா மிதூன் ’அந்தர் பல்டி’..!

 
குறிப்பிட்ட பிரிவு மக்களை குறித்த வாய் தவறி அவதூறாக பேசிவிட்டதாகவும், தன்னை நம்பி பல தயாரிப்பாளர்கள் இருப்பதால் தனக்கு பிணை வழங்க வேண்டும் என்று கூறி நடிகை மீரா மிதூன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சமூகவலைதளத்தில் சினிமா பிரபலங்கள் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டு வந்த மீரா மிதூன், சமீபத்தில் பட்டியலின மக்களை குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு மீரா மிதூன் மீது புகார் அளித்தார்.

அதன்பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் படி 7 பிரிவுகளின் கீழ் மீரா மிதூன் மீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கேரளாவில் தலைமறைவான அவரை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். வன்கொடுமை தடை சட்டத்தில் கைதான அவரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்

இந்நிலையில் நீதிமன்றத்தை நாடியுள்ள அவர், வாய் தவறி குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி பேசி விட்டதாகவும், பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும், எனவே பிணை வழங்குமாறு மனு முறையிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.