என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக… மகன் பிறந்த நெகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்!!

 

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் சிவகார்த்திகேயன். இவர் ‘மெரினா’ திரைப்படம் மூலம் கதாநாயகன் ஆக்கினார் இயக்குனர் பாண்டிராஜ். அதன் பின் சில திரைப்படங்கள் நடித்தாலும் ‘எதிர் நீச்சல்’ திரைப்படம் அவரை முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக மாற்றியது.

அதன்பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களின் வெற்றி அவரை பல கோடி சம்பளம் வாங்கும் நடிகராக மாற்றியது. தற்போது இவர் நடிப்பில் டாக்டர், அயலான் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதேபோல், டான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு ஆர்த்தியைத் திருமணம் செய்தார் சிவகார்த்திகேயன். 2013-ல் ஆராதனா என்கிற மகள் பிறந்தார். இந்நிலையில் ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார் சிவகார்த்திகேயன்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக. என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்” என்று பதிவிட்டுள்ளார்.

ஆண் குழந்தைக்குத் தந்தையான சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.