கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்..!

 

நாடு முழுவதும் கோவிட் 19 வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்கிற அறிவிப்பை தொடர்ந்து பலரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திரைத்துறையில் இருக்கும் முக்கிய பிரபலங்கள் பலர் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை போட்டுக்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

சென்னை குமரன் மருத்துவமனையில் இருவருக்குமான முதல் மருந்து வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ரஜினிகாந்துடன் நயன்தாரா நடித்துள்ள ‘அண்ணாத்த’ படம் வெளியாகவுள்ளது. அதேபோல விரைவில் தனது ‘காத்துவாக்குல் ரெண்டு காதல் படத்திற்கான பணிகளில் மீண்டும் விக்னேஷ் சிவன் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், கொரோனா இரண்டாவது ஊசி போட்டுக்கொண்டார். அவரை தொடர்ந்து ராதிகா, சிம்ரன், கமல்ஹாசன், ஹாரீஸ் ஜெயராஜ் மற்றும் சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்டோரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.