சென்னையில் சொந்தமாக தியேட்டர் வாங்கினார் நயன்தாரா..!!

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, கார்த்தி, கே.இ. ஞானவேல் ராஜா வரிசையில் நயன்தாராவும் தியேட்டர் அதிபாராகியுள்ளார்.
 

தென்னிந்திய திரையுலகில் நயன்தாரா அடைந்த உச்சத்தை இதுவரை எந்த நடிகையும் அடைந்தது கிடையாது. முதன்முதலாக கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை என்கிற பெயர் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயர் பெற்ற வரை, அவர் தான் நடிகைகளுக்கான ஒரு ஹீரோயிஸ பாதையை வகுத்தார்.

தற்போது சினிமாவை தொடர்ந்து பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதையும் ஆர்வமாக தொடர்ந்து வருகிறார். மும்பையைச் சேர்ந்த சாய்வாலா என்கிற டீ கடை, உதட்டுச் சாயங்களை தயாரிக்கும் தி லிப் பாம், இறைச்சி விற்பனையை செய்து வரும் ஃபிப்போலா உள்ளிட்ட நிறுவனங்களில் நயன்தாரா பெரியளவில் முதலீடு செய்துள்ளார்.

மேலும் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் சொந்தமாக அவர் வைத்துள்ளார். இந்நிறுவனம் மூலம் வெப் சிரீஸ், குறும்படங்கள், திரைப்படங்கள் உள்ளிட்டவற்றை அவர் தயாரித்து வருகிறார். இந்த வரிசையில் நயன்தாரா பொழுதுப்போக்கு துறையிலும் கால்பதிக்கிறார்.

சென்னையில் மூடப்பட்டுள்ள அகஸ்தியா திரையரங்கத்தை அவர் சொந்தமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் சென்னையின் பிரபலமாக திரையரங்குகளில் ஒன்றாக அகஸ்தியா இருந்தது. ஆனால் மாறி வரும் சூழல், பராமரிப்புச் செலவு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி அந்த திரையரங்கம் மூடப்பட்டுவிட்டது. 

தற்போது அதை வாங்கி புணரமைப்பு செய்து மீண்டும் செயல்படுத்த நயன்தாரா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு திரையரங்குகளை அவர் கட்டவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமாவில் ஏற்கனவே சூர்யா, விஜய், கார்த்தி, கே.இ. ஞானவேல் ராஜா உள்ளிட்டோருக்கு சொந்தமாக திரையரங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.