சென்னையில் பா.ரஞ்சித் நெருங்கிய நண்பர் வெட்டிக்கொலை..!

 
பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் நண்பரும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவருமான ஆம்ஸ்ட்ராங் இன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டார். படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

உணவு டெலிவரி செய்பவர் போன்று ஆடை அணிந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் ஆம்ஸ்ட்ராங் அவர்களை சரமாரியாக வெட்டியதாகவும் இதனை அடுத்து ஆம்ஸ்ட்ராங் வெட்டப்பட்ட இடத்தில் கத்தி அரிவாள் போன்ற ஆயுதங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆம்ஸ்ட்ராங் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு சில நிமிடங்களில் அவர் உயிரிழந்தார். அவருடைய உடலை பார்க்க பகுஜன் சமாஜ் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள், நண்பர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் நெருங்கிய நண்பர் பா. ரஞ்சித் மருத்துவமனையில் அவரது மரணச் செய்தியை கேட்டு கதறி அழுத காட்சி அனைவருக்கும் கண்ணீரை வரவழைத்தது.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் அவரை கொலை செய்த மர்ம கும்பலை விரைவில் பிடித்து விட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.