தங்கலான் படத்துக்கு குட்பை சொன்ன பிரபல நடிகை..!!

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்திற்கான படப்பிடிப்பை முடித்துக்கொண்டு பிரபல நடிகை புறப்பட்டுள்ள செய்தி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை பெற்ற படங்களில் ஒன்றாக உள்ளடு தங்கலான். இதனுடைய மிரட்டலான கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியானதில் இருந்து, ஒவ்வொரு ரசிகரும் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பை வளர்த்துக்கொண்டுள்ளனர்.

விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பசுபதி, ஹரிகிருஷ்ணன், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ. ஞானவேல் ராஜா படத்தை தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கர்நாடக மாநிலம் கே.ஜி.எஃப் பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடியின மக்களை குறித்த பின்னணியில் வரலாற்றுப் படமாக தங்கலான் தயாராகி வருகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு படப்பிடிப்பின் நடந்த விபத்தில் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டது. அதனால் படத்தை படக்குழு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. அதையடுத்து சென்னையில் தங்கலான் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. அதில் விக்ரம், பசுபதி, மாளவிலா, பார்வதி உள்ளிட்டோரின் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்தன. 

அதிலும் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து பார்வதி திருவோத்து, படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துவிட்டு புறப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விக்ரம் உடன் பார்வதி இணைந்து நடிக்கும் முதல் படம் தங்கலான் என்பது குறிப்பிடத்தக்கது.