விரைவில் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் கவிஞர் சினேகன்..!

 

திரைப்பட பாடலாசிரியர், நடிகர், அரசியல் தலைவர் என பரபரப்பாக இருக்கும் கவிஞர் சினேகன் விரைவில் இல்லற வாழ்கையில் இணைந்திட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழில் 1997-ம் ஆண்டு வெளியான ‘புத்தம் புது பூவே’ என்கிற படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் சினேகன். அதை தொடர்ந்து பாண்டவர் பூமி, மௌனம் பேசியதே, பகவதி, சாமி, சூரரைப் போற்று உட்பட பல்வேறு படங்களுக்கு அவர் பாடல் எழுதியுள்ளார்.

மேலும் யோகி, உயர்திரு 420 ஆகிய படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு ஒளிப்பரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று நிகழ்ச்சியின் இறுதிவரை விளையாடினார். 

அப்போது நடிகர் கமல்ஹாசனுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக, அவர் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மநீம சார்பில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

தற்போது 42 வயதாகும் கவிஞர் சினேகன் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் மணமுடிக்கவுள்ள பெண்ணை குறித்து எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை. விரைவில் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.