பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல்- நிலவரம் கலவரமானது...!!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் நாள் சிறப்பான தொடக்கமாக இருந்தாலும், அது முதல் பாகத்தின் வசூலை முறியடிக்கவில்லை என்கிற விபரம் பாக்ஸ் ஆஃபிஸ் அறிக்கையில் தெரியவந்துள்ளது. 
 

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 பாகம் கடந்த 28-ம் தேதி உலகளவில் வெளியானது. ரசிகர்களின் பெருத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

கடந்தாண்டு பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது. உலகளவில் சுமார் 3200 திரையரங்குகளில் மட்டுமே முதல் பாகம் ரிலீஸ் செய்யப்பட்டது. அரசின் உத்தரவை பின்பற்றி, காலை 9 மணிக்கு தான் படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. அதன்மூலம் உலகளவில் பிஎஸ்-1 படம் முதல் நாளில் ரூ. 80 கோடி வசூலை பெற்றது.

ஆனால் இரண்டாவது பாகம் மொத்தம் 4500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. அதேபோன்று ரசிகர்கள் ஷோவும் இருந்தது. எனினும் இந்த படம் உலகளவில் ரூ. 38 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. அதற்கு காரணம் படத்தின் மீதான கலவையான விமர்சனங்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும், பொன்னியின் செல்வன் முதல் பாகத்துக்கு பிறகு த்ரிஷா நடிப்பில் ராங்கி, கார்த்தி நடிப்பில் சர்தார், ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் போன்ற படங்கள் வெளியாகின. இவை அனைத்தும் படுதோல்வி அடைந்தன. இப்படங்களின் தாக்கம் காரணமாகவும், பொன்னியின் செல்வன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

அதன்படி, தமிழகத்தில் முதல் நாள் மட்டுமே ரூ. 20 கோடி வரை வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் இது பொன்னியின் செல்வனுக்கு கிடைத்துள்ள நல்ல ஓப்பனிங் என கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் முதல் நாள் வசூலில் ரூ. 5.39 கோடியும், அமெரிக்காவில் ரூ. 4.8 கோடியும் பிஎஸ் 2 படம் வசூலித்துள்ளது.