பி.எஸ் படத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், ஜெயராமுக்கு இவ்வளவுதான் சம்பளமா..??

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த நடிகர், நடிகையரின் சம்பள விபரங்கள் குறித்த தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியமடையச் செய்துள்ளது.
 

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக தயாராகியுள்ளது. அதில் ஏற்கனவே முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுவிட்டது. இதனுடைய இரண்டாவது பாகம், வரும் 28-ம் தேதி வெளிவருகிறது. இதற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

இதில் புதிய தகவலாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர், நடிகையரின் சம்பள விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து விக்ரமுக்கு ரூ. 13 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. 

அவருக்கு அடுத்த படியாக இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து, ஐஸ்வர்யா ராய்க்கு ரூ. 10 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் த்ரிஷாவுக்கு ரூ. 3 கோடியும், கார்த்திக்கு ரூ. 5 கோடியும், ஷோபிதா தூளிபலாவுக்கு ரூ. 2.5 கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லெக்ஷ்மிக்கு ரூ. 1.5 கோடி சம்பளம் 2 பாகங்களுக்கும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் ஜெயம் ரவிக்கு இரண்டாவது பாகத்துக்கு ரூ. 1 கோடி சம்பளம் வழங்கப்பட்டது மட்டும் தெரியவந்துள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களில் பிரபுவுக்கு ரூ. 1.5 கோடி, பிரகாஷ் ராஜுக்கு ரூ. 1.5 கோடி, ஐஸ்வர்யா லெக்ஷ்மிக்கு ரூ. 1.5 கோடி, ஜெயராமுக்கு ரூ. 1 கோடி உள்ளிட்டோருக்கு இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தின் இயக்குநர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டோரின் சம்பள விபரங்கள் எதுவும் தெரியவில்லை. எனினும், இந்த தகவலை படத் தயாரிப்பு நிறுவனம் இதுவரை உறுதி செய்யவில்லை.