பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் ப்ரியாமணி..!

 
தெலுங்கில் தயாராகி வரும் பீம்லா நாயக் படத்தை தொடர்ந்து பவன் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் ப்ரியாமணி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தியில் வெளியான ‘தி ஃபேமிலி மேன்’ சிரீஸ் ப்ரியாமணிக்கு தேசியளவில் முக்கிய அடையாளத்தை பெற்று கொடுத்துவிட்டது. இதன்மூலம் அவர் நடிக்கும் சில தென்னிந்திய படங்களுக்கு அங்கு சந்தை மதிப்பு உயர்ந்துள்ளதும் கவனிக்கப்படுகிறது.

அட்லீ இயக்கும் ஷாரூக்கான் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இருப்பினும் ப்ரியாமணி முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அந்த கதாபாத்திரத்தில் ப்ரியாமணி தான் நடிக்க வேண்டும் என ஷாரூக்கான் அட்லீயிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் காட்ஃபாதர் படத்திலும் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ப்ரியாமணி. இந்த வரிசையில் சிரஞ்சீவியின் சகோதரரும் தெலுங்கு சினிமா கொண்டாடும் உச்ச நடிகருமான பவன் கல்யாண் படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கான பீம்லா நாயக் படத்தில் தற்போது பவன் கல்யாண் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ஹரிஷ் சங்கர் என்பவர் இயக்கும் படத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார்.

ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றி கப்பர் சிங் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனால் இப்புதிய படத்தின் மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது. கமர்ஷியல் அம்சங்களுடன் தயாராகும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.