புஷ்பா 2 ஷூட்டிங்கில் இணைந்த ராஷ்மிகா..!!

தெலுங்கு சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் புஷ்பா இரண்டாம் பாகம் படத்துக்கான ஷூட்டிங் நடிகை ராஷ்மிகா மந்தனா பங்கேற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
 

இன்றைய தேதியில் தென்னிந்திய சினிமா மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கான அளவுகோலில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இந்தியிலும், தெலுங்கிலும் சில முக்கியப் படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 2020-ம் ஆண்டு அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்து வெளியான ‘புஷ்பா’ படத்தில் ஸ்ரீவள்ளி என்கிற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்தார். அப்படம் பெரியளவில் ஹிட்டானதை அடுத்து, ராஷ்மிகா தேசியளவில் சென்சேஷன் நடிகையாக மாறினார்.

இதன்மூலம் அவருக்கு பாலிவுட் வாய்ப்புகள் குவிந்தன. 2022-ம் ஆண்டு மிஷன் மஞ்சு படத்தில் நடித்த அவர், அதே ஆண்டு ‘குட்பை’ என்கிற இந்திப் படத்திலும் நடித்து முடித்தார். இப்படத்தில் அவர் அமிதாப் பச்சன் மகளாக நடித்துள்ளார். இதையடுத்து தற்போது சந்தீப் வாங்கா இயக்கத்தில் ‘அனிமல்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த வரிசையில் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பில் ராஷ்மிகா இணைந்துள்ளார். முதல் பாகத்தில் புஷ்பாவின் காதலியாக நடித்த ராஷ்மிகா, இப்பாகத்தில் அவரது மனைவியாக நடிக்கிறார்.