நேரடியாக மோதும் புஷ்பா - கே.ஜி.எஃப்- 2: எகிறும் எதிர்பார்ப்பு..!

 

தெலுங்கில் தயாராகியுள்ள புஷ்பா படமும், கன்னடத்தில் தயாராகியுள்ள ‘கே.ஜி.எஃப் படமும் நேரடியாக ஒரே நாளில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கில் தயாராகி வரும் படம் புஷ்பா. தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வெளிவரவுள்ளது. இரண்டு பாகங்களாக தயாராகும் இப்படத்தின் முதல் பகுதி கிறிஸ்துமஸ் விடுமுறை நாளில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதேபோல கன்னடத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் தயாரிக்கப்பட்டுள்ள படம் கேஜிஎஃப்- 2. இதனுடைய முதல் பாகம் தேசியளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனால் இப்படத்துக்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படமும் கிறிஸ்துமஸ் தினத்தின் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இப்படம் வரும் ஆகஸ்டு மாதம் வெளியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அந்த முடிவு கைவிடப்பட்டது. இப்படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸாகிறது.

தென்னிந்திய ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளை பெற்றுள்ள இப்படம் ஒரே நாளில் வெளியிடப்படுவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெலுங்கு, கன்னட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறிக்கிடக்கிறது.