‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குநருடன் கைக்கோர்க்கும் ரஜினிகாந்த் ?

 

அண்ணாத்த படம் முடிந்து விரைவில் சென்னை திரும்பும் நடிகர் ரஜினி, தான் அடுத்ததாக நடிக்கும் படத்திற்கான் கதை டிஸ்கஷனில் ஈடுபடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இருந்தபோதிலும் ஹைதராபாத் ராமோஜிராவ் ஃப்லிம் சிட்டியில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி படத்திற்கான படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். அவருடன் அனைத்து நடிகர்கள் நடிகையர்களும் படப்பிடிப்பில் பங்கேற்று படக்குழுவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

விரைவில் ரஜினிகாந்துக்குரிய காட்சிகள் எடுத்து முடிக்கப்படவுள்ளன. அதனால் இன்னும் ஒரு வாரத்தில் அவர் சென்னை திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவுள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை முடிந்ததும் மீண்டும் படங்களில் நடிக்க ஆயத்தமாகிறார். ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ஆகிய இருவரிடமும் கதை கேட்டு வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அதில் தேசிங்கு பெரியசாமியின் கதை அவரை மிகவும் கவர்ந்துள்ளதாம். அதற்கான பேச்சுவார்த்தை ஜூலை மாதத்திற்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து படப்பிடிப்பு துவங்கப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. பொறுத்திருந்து பார்க்கலாம்.