மீண்டும் வெளியாகிறது கபாலி: தாணு அறிவிப்பு..!!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கபாலி’ படத்தை நவீன தரத்துக்கு மாற்றி, கிளைமேக்ஸில் மாற்றம் செய்து வெளியிடவுள்ளதாக தயாரிப்பாளர் எஸ். தாணு கூறியுள்ளார்.
 

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, ஜான் விஜய், ரித்திகா, கலையரசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘கபாலி’. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இந்த படத்துக்கு ஏகோபித்த ஆதரவு ரசிகர்களிடையே எழுந்தது.

வேறு எந்த படத்திலும் இல்லாத வகையில் கபாலி படத்தில் ரஜினிகாந்த் அனுபவித்து நடித்தார். ஆனால் அவருடைய முந்தைய படங்கள் அளவுக்கு கபாலி ரசிகர்களை கவரவில்லை. கிளைமேஸ் கொஞ்சம் வேறு மாதிரி இருந்தால், நிச்சயம் கபாலி படம் மெகா ஹிட் வெற்றி அடைந்திருக்கும் என்று கூறப்பட்டது.

எனினும் தயாரிப்பாளருக்கு இந்த படம் நல்ல வசூலை குவித்ததாகவும், அவருக்கு இந்த படம் மூலம் இரட்டிப்பு லாபம் கிடைத்ததாகவும் கூறப்பட்டது. எனினும், பல தரப்பினர் கிளைமேக்ஸ் காரணமாக கபாலி தோல்வி அடைந்துபோனதாக இன்னும் பலரும் கருதுகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ். தாணு சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆளவந்தான் படத்தை கமல்ஹாசன் ரீமாஸ்டிரிங் செய்து வெளியிட்டார். அதேபோன்று கபாலி படமும் ரீ எடிட் செய்து, கிளைமேக்ஸை மாற்றி வெளியிடப்படும் என்று தாணு கூறினார்.

எதற்காக இந்த நடவடிக்கையை தாணு மேற்கொள்கிறார் என்று தெரியவில்லை. முன்னதாக கபாலி வெளியான போது, சமூகவலைதளங்கள் ப்ரோமோஷன் மூலமாக மட்டும் தாணுவுக்கு ரூ. 200 கோடி லாபம் கிடைத்ததாக கூறப்பட்டது. தற்போது மீண்டும் பணமெடுக்கும் நோக்கில், இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பலரும் கூறுகின்றனர்.