லியோ படத்தில் த்ரிஷாவுக்கு பதில் சாய் பல்லவியா..!! இது எப்போ..??

தனது கேரியர் குறித்து சாய் பல்லவி எடுத்த ஒரு தீர்க்கமான முடிவால், லியோ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்துள்ளார். 
 
 

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. லியோ படத்தில் நடிக்க பல பிரபலங்கள் காத்திருக்கும் நிலையில், அந்த பட வாய்ப்பை வேண்டாம் என்று ஒரு நடிகை உதறி தள்ளிய செய்தி தற்போது தெரியவந்துள்ளது.

தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களை கொண்ட நடிகை சாய் பல்லவி, லோகேஷ் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சாய் பல்லவி 2015 ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் மலையாளத் திரைப்படமான பிரேம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய அந்த படத்தில் மலர் டீச்சராக நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தார். 

சாய் பல்லவியின் நடிப்பால் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு கோலிவுட்டுக்கு வந்த சாய் பல்லவி, மாரி 2, என்ஜிகே, தியா போன்ற படங்களில் நடித்தார். ஆனால் அவருக்கு தாய் மொழியான தமிழ் பெரியளவில் கைக்கொடுக்கவில்லை. இதனால் தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

அவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான முதல் படம் ‘ஃபிடா’ மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து ஒரேநாளில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார். தொடர்ந்து நடிப்புக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் மட்டுமே அதிகமாக அவர் நடித்து வந்தார். இதன்மூலம் சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணனுக்கு பிறகு சாய் பல்லவி தெலுங்கு சினிமாவின் கொண்டாடப்பட்ட நடிகையாக மாறினார்.

சமீபத்தில் சாய் பல்லவி தனது கேரியர் குறித்து ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளார். இதன்படி முக்கியமான மற்றும் பெரிய வேடங்களில் மட்டுமே நடிக்க எண்ணியிருக்கிறார். இதனால் சூப்பர் ஸ்டார் பட வாய்ப்புகளை கூட வேண்டாம் என்று கூறி சாய் பல்லவி மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. அந்த வரிசையில் விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் லியோ படத்தில் நடிப்பதற்கு சாய் பல்லவிக்கு அழைப்பு வந்தது.

ஆனால் அந்த படத்தில் கதாநாயகி பாத்திரத்துக்கு பெரியளவில் ஸ்கோப் இல்லை என்று சாய் பல்லவி கருதியுள்ளார். இதன்காரணமாகவே அந்த வாய்ப்பு த்ரிஷா பக்கம் போயுள்ளது. லோகேஷ் கனகராஜ் இதுவரை ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுத்தது இல்லை. அதை கருதியும் சாய் பல்லவி லோகேஷ் பட வாய்ப்பை மறுத்துவிட்டதாக தெரிகிறது. 

முன்னதாக அஜித் குமார் நடித்த துணிவு படத்தில் கதாநாயகியாக நடிக்க சாய் பல்லவிக்கு அழைப்பு வந்தது. ஆனால் அந்த பாத்திரத்துக்கு முக்கியத்துவமில்லை என்று கூறி, அந்த வாய்ப்பையும் அவர் மறுத்துவிட்டார். அதற்கு பிறகு தான் எச் வினோத்தின் துணிவு படத்தில் மஞ்சு வாரியர் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.