செப்டம்பர் 28-ம் தேதி சலார் படம் வெளியாவதில் சிக்கல் : வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!  

 

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் சலார் படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியானதிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருந்தன. இந்நிலையில் படம் செப்டம்பர் 28 அன்று ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே படக்குழுவால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறது என சமூக வலைத்தளங்களில் செய்திகள் கசிந்தன. தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் ரிலீஸ் தேதி தள்ளி போவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமையாக நிறைவடையாததால் இப்படம் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டின் முதல் பாதியில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. இப்படத்தில் பிரபாஸ் உடன் ஸ்ருதிஹாசன், பிரித்திவிராஜ், ஜெகபதி பாபு போன்றோர் நடிக்கின்றனர். 400 கோடிக்கும் அதிகமான பொருட்செலவில் பிரம்மாண்டமான ஆக்சன் படமாக இது உருவாகி வருகிறது.