போதை கடத்தல் கும்பலுடன் ஷாரூக்கான் மகனுக்கு தொடர்பு...?

 

பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கானுக்கு சர்வதேச போதை கடத்தல் கும்பலுடன் தொடர்புள்ளதா என்கிற கோணத்தில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொகுசு கப்பலில் நடந்த போதை விருந்து பார்ட்டி விவகாரத்தில் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தெரியவந்துள்ளது.

அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 7-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இன்று காலை முதல் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரிடமும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களின் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்மூலம் பதிவாகி இருந்த உரையாடல்கள் மற்றும் புகைப்படங்களை வைத்து அதிகாரிகள் ஆதாரம் திரட்டியுள்ளனர். அதை வைத்து கேள்விக் கேட்டு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள தகவலில், ஆர்யன் கானுக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். ஆர்யன் கானின் செல்பேசி உரையாடல்கள் மூலம் இதை உறுதி செய்வதாக அவர் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே ஆர்யன்கான் மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேர் மீதும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் போதைப்பொருள் பிரிவு சட்டத்தின் கீழ் தண்டனை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் இந்த விவகாரம் பாலிவுட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.