உடலில் ஈயம் பூசிக்கொண்டு நடித்த நடிகருக்கு நேர்ந்த சோகம்..!!
 

பெரியமருது படத்தில் ஈயம் பூசிக்கொண்டு நடித்த நடிகருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை குறித்து இயக்குநரும் நடிகருமான மனோபாலா வெளியிட்டுள்ள தகவல் காண்போரை கலக்கமடையச் செய்துள்ளது.
 
 

தமிழில் 1994-ம் ஆண்டு என்.கே. விஸ்வநாதன் இயக்கத்தில் வெளியான படம் ‘பெரியமருது’. விஜயகாந்த், ரஞ்சிதா, பிரகதி உள்ளிட்டோர் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் கவுண்டமணி, செந்திலின் நகைச்சுவை காட்சிகள் தனி டிராக்காக இடம்பெற்றிருக்கும்.

அப்படியொரு காட்சியில் கவுண்டமணி ஈயம் பூசுவதற்கு செந்தில் உள்ளிட்ட தனது பணியாளர்களுடன் ஒரு ஊருக்கு சென்றிருப்பார். அப்போது அந்த ஊரைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்படும் பிரச்னையில், அந்த நபருக்கு உடல் முழுவதும் ஈயம் பூசிவிடுவார்.

இந்த காட்சி இன்றளவும் பிரபலமானதாக உள்ளது. பலரும் சமூகவலைதளங்களில் இந்த காட்சியை ஆவலுடன் பார்த்து ரசிப்பது தொடர்கிறது. அந்த காட்சியில் உடலில் ஈயம் பூசுவது போல நடித்த நடிகரின் பரிதாப நிலை குறித்து இயக்குநரும் நடிகருமான மனோபாலா பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அந்த நடிகரின் பெயர் ’கருப்பு’ சுப்பையா. 1990 முதல் 1995-ம் ஆண்டு வரை வெளியான பல்வேறு படங்களில் இன்றவு டிரெண்டிங்கில் இருக்கும் காமெடிக் காட்சிகளில் சுப்பையா நடித்துள்ளார். ஜல்லிக்கட்டு காளை, கட்டபொம்மன், செந்தூர பூவே, பட்டத்துராணி உள்ளிட்ட படங்கள் அதில் குறிப்பிடப்பட வேண்டியவை ஆகும்.

பெரியமருது படத்தில் குறிப்பிட்ட காட்சியில் சுப்பையா நடித்த போது, அவருடைய உடல் முழுவதும் பெயிண்டு பூசப்பட்டது. வெறும் ரூ. 100 சம்பளத்துக்காக அந்த காட்சியில் சுப்பையா நடித்திருந்தார். அந்த காட்சி எடுத்த அடுத்தநாள், தோல் ஒவ்வாமை ஏற்பட்டு சுப்பையா இறந்துபோனதாக மனோபாலா கூறியுள்ளார்.

இந்த தகவல் காண்போரை மிகவும் கண்கலங்க வைத்துள்ளது. சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் பல நடிகர்கள் நிலை இப்படித்தான் இருக்கிறது. இன்றைய காலம் அப்படியொரு நடிகர்களை பார்க்கவே முடியாது. அதனால் இனி சுப்பையா நடித்த காட்சிகளை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவரை ஒரு நிமிடம் நினைவுகூருங்கள். அதுவே அவரைப் போன்ற நடிகர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.