ரம்ஜான் நாளில் மோதும் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ஆண்டனி..!

 

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படமும் விஜய் ஆண்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன் படமும் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘நான்’ படத்தின் மூலம் கதாநாயகனாக கால்பதித்தார். அந்த படம் வெற்றி அடைந்த பிறகு தொடர்ந்து நடிப்பில் தீவிரமாக அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

அவருடைய 14-வது படமாக தயாராகியுள்ள படம் ‘கோடியில் ஒருவன்’. ஆனந்த கிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ள இந்த படம் கல்வியின் தேவையையும் அதனுடைய முக்கியத்துவத்தை குறித்தும் பேசுகிறது. இந்த படத்தில் கேஜிஎஃப் பட வில்லன் கருடன் ராமசந்திர ராஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ள நிலையில், கோடியில் ஒருவன் படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வரும் மே 14ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படமும் திரைக்கு வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தாண்டு ரம்ஜான் பண்டிகைக்கு இந்தியளவில் எதிர்பார்க்கப்பட்டு வரும் சல்மான் கான் நடித்துள்ள ‘ராதே’ படமும் வெளிவரவுள்ளது. பிரபுதேவா இயக்கியுள்ள இந்த படத்தில் காதல் பரத், மேகா ஆகாஷ் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனால் தமிழிலும் இந்த படத்தை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.