இந்தியில் கர்ணனாக அறிமுகமாகும் சூர்யா..??
 

இந்தியில் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கும் ‘கர்ணா’ படத்தில் நடிகர் சூர்யாவை முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
 

பாலிவுட் சினிமாவில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்த ‘ரங்கே தே பசந்தி’, ’டெல்லி 6’ போன்ற படங்களை இயக்கியவர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா. இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘தூஃபான்’. இது ரசிகர்களிடம் வரவேற்பு பெற தவறிவிட்டது.

இந்நிலையில் அவர் அடுத்ததாக மஹாபாரதத்தை தழுவி உருவாகும் 2 பாகங்கள் கொண்ட படத்தை இயக்குகிறார். அதில் கர்ணனாக நடிப்பதற்கு சூர்யாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஒருவேளை இது உறுதியானால், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்கு பிறகு சூர்யா நேரடியாக நடிக்கும் முதல் இந்திப் படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

சூர்யா தற்போது ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் ஃபேண்டசி கலந்த சரித்தர கால கதையில் படமாகி வருகிறது. இதையடுத்து அவர் சுதா கொங்குரா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இவ்விரு படங்களுக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் வெற்றிமாறன் தற்போது ‘விடுதலை 2’ பட ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால். வாடிவாசல் பணிகள் எப்போதும் துவங்கும் என்று தெரியவில்லை. எனினும் இந்த படம் உருவாவது உறுதி என்று படக்குழு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.