ஆஸ்கருக்கு செல்லும் தங்கலான்- படக்குழு அறிவிப்பு..!!
 

தமிழில் விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் ‘தங்கலான்’ படம் தொடர்பான முக்கிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
 

சார்பாட்டா பரம்பரை மற்றும் நட்சத்திரம் நகர்கிறது படங்களுக்கு பிறகு பா. ரஞ்சித் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘தங்கலான்’. விக்ரம், பார்வதி திருவோத்து, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகி வருகிறது.

தற்போதைய கே.ஜி.எஃப் என்கிற கோலார் தங்க வயல் பகுதியில் வாழ்ந்து வந்த பூர்வக்குடி மக்களை பற்றிய படமாக தங்கலான் தயாராகிறது. இதில் விக்ரம் 30 வயது இளைஞர் முதல் 60 வயது முதியவர் வரையிலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அண்மையில் தங்கலான் பட கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகின. அதை பார்க்கும் போது ஹாலிவுட்டில் வெளியான ‘அப்பகேலிப்ட்டோ’ படம் நினைவுக்கு வந்தது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் துரித கதியில் தயாராகி வருகிறது. இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்துக்காக நீண்ட தலைமுடி, தாடி, பண்டைய கால முறையில் கோமனம் கட்டி விக்ரம் படத்தில் நடித்துள்ளார். விரைவில் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, படத்தின் திரை வெளியீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

அத்துடன் தங்கலான் படத்தை ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இடம்பெறச் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.