குந்தவைக்கு குட்பை சொன்ன த்ரிஷா..!!

பொன்னியின் செல்வன் 2 படத்துக்காக ட்விட்டரில் தனது பெயரை குந்தவை என்று மாற்றி வைத்திருந்த த்ரிஷா, தற்போது மீண்டும் தனது பெயரில் புதிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளார்.
 
 

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வரும் 28-ம் தேதி வெளிவருகிறது. இதற்கான ப்ரோமோஷன் பணிகள் தமிழ்நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு வெளியானது. அப்போது அந்த படத்தில் நடித்திருந்த அனைவரும், சமூகவலைதளப் பக்கங்களில் தங்களுடைய பெயரை பொன்னியின் செல்வன் கதாபாத்திர பெயர்களாக மாற்றி  வைத்துக்கொண்டனர்.

இதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு எழுந்தது. பல ஊடகங்கள் நடிகர்களின் முயற்சியை பாராட்டின. இன்னும் சில தினங்களில் பொன்னியின் செல்வன் 2 வெளியாகவுள்ளது. அதையொட்டி த்ரிஷா மற்றும் ஜெயம் ரவி ட்விட்டரில் தங்களுடைய பெயர்களை பொன்னியின் செல்வன் கதாபாத்திர பெயர்களாக மீண்டும் மாற்றினர்.

ஆனால் ட்விட்டரின் புதிய விதிகளின் படி, பெயர் மாற்றம் செய்தால் ப்ளூ டிக்கை பயனர்கள் இழக்க நேரிடும். இது தெரியாமல் இருவரும் தங்களுடைய பெயர்களை மாற்றிவிட்டனர். இதனால் த்ரிஷா மற்றும் ஜெயம் ரவி ப்ளூ டிக்கை இழக்கும் சூழல் ஏற்பட்டது.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட த்ரிஷா, ட்விட்டரில் தனது பெயரை ‘ட்ரிஷ்’ என்று மாற்றியுள்ளார். இதனால் த்ரிஷா குந்தவையை கைவிட்டுவிட்டதாக ஃபோலோயர்ஸ் புலம்பி வருகின்றனர்.