செந்தமிழை நினைத்து பெருமூச்சு விட்ட த்ரிஷா..!

 

பொன்னியின் செல்வன் படத்துக்காக சொந்தமாக டப்பிங் செய்து வரும் த்ரிஷா செந்தமிழை நினைத்து பெருமூச்சு விடுவதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். இதற்கான படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில், சில பேட்ச் வொர்க் காட்சிகளுக்கு ஷூட்டிங் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

எனினும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர்கள் தங்களுடைய டப்பிங் பணிகளை துவங்கியுள்ளனர். சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் வானவன் மாதேவியாக நடித்த வித்யா சுப்பிரமணியம் தனக்கான காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடித்தார்.

அவரை தொடர்ந்து தற்போது த்ரிஷா தன்னுடைய குந்தவை கதாபாத்திரத்துக்கு சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாவில் புகைப்படம் பதிவிட்டுள்ள அவர், செந்தமிழ் பெருமூச்சு என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை த்ரிஷா ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஆயுத எழுத்து’ படத்தில் நடித்துள்ளார். அவர் சினிமா துறைக்கு வந்து சொந்தமாக டப்பிங் பேசிய முதல் படம் அதுதான். அதை தொடர்ந்து சமரன், மங்காத்தா, மன்மதன் அம்பு உள்ளிட்ட படங்களுக்கு சொந்த குரலில் டப்பிங் செய்துள்ளார்.