மீண்டும் இணையும் த்ரிஷ்யம் கூட்டணி- கோலாகலமாக நடந்த பூஜை..!

 
மலையாள சினிமாவில் எப்போதும் ஹிட் காம்போவாக இருக்கும் மோகன்லால் - ஜீத்து ஜோசப் மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்திற்கான பூஜை கோலாகலமாக நடந்து முடிந்தது.

கடந்த 2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் முதன்முறையாக நடித்த ‘த்ரிஷ்யம்’ படம் வெளியானது. இந்த படம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. சீனா மொழி உட்பட பல்வேறு மொழிகளில் இப்படம் உருவாக்கப்பட்டு அனைத்து பதிப்புகளுமே வெற்றி பெற்றன.

இதையடுத்து மோகன்லால், த்ரிஷா நடிப்பில் ‘ராம்’ என்கிற படத்தை துவங்கினார் ஜீத்து ஜோசப். ஆனால் கொரோனா காரணமாக அந்த படத்தின் பணிகள் தடைப்பட்டுள்ளன. அப்போது கிடைத்த இடைவெளியில் துவங்கப்பட்ட படம் தான் ‘த்ரிஷ்யம்-2’.

முதல் பாகத்தின் தொடர் பாகமாக வெளியான இந்த படம் அமேசான் பிரைமில் வெளியானது. முதல் பாகத்தைக் காட்டிலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது பல்வேறு மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து ராம் படத்துக்கான பணிகள் தடைபட்டு வருகின்றன. அதனால் மூன்றாவது முறையாக ஜீத்து சோப் - மோகன்லால் கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்துக்கு ட்வெல்த் மேன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுவும் முழுக்க முழுக்க த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமாகவே தயாராகிறது.

இந்நிலையில் படத்துக்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்வில் ஜீத்து ஜோசப், தயாரிப்பாளர் ஆண்டனி உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த படத்திற்கான பணிகள் ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.