மாமன்னன் தான் என் கடைசிப் படம்- உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு...!!

அமைச்சர் பொறுப்பேற்ற பின்னரும் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தால், அது அன்றாக இருக்காது. அதனால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எந்த படத்திலும் நடிக்கப்போவது கிடையாது. அதற்கு பிறகு நான் நடிக்கவேண்டுமா? இல்லையா? என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாமன்னன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. இதற்கு படக்குழு அனைவரும் வந்திருந்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னர் வெளியில் ஊடகத்தினரை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், மாமன்னன் நான் நடிக்கும் கடைசிப் படமாக இருக்கும் என்று கூறினார். மேலும் பேசுகையில், இந்த படத்தை வரும் ஜூன் 29-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளோம். மிகுந்த பனிச்சுமைக்கு இடையில் படத்துக்கான டப்பிங், இசை வெளியீட்டு விழா போன்றவற்றுக்கு நேரம் ஒதுக்கியுள்ளேன்.

அதனால் எனக்கு தெரிந்து இதுதான் எனது கடைசிப் படமாக இருக்கும். அது நல்ல படமாக அமைந்திருப்பதில் மகிழ்ச்சி. அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் இயக்குவதாக இருந்தது. ஆனால் அமைச்சர் பதவியேற்ற பின்னர் இனி நடித்துக்கொண்டிருந்தால் நன்றாக இருக்காது.

எனினும் மாரி செல்வராஜ் என்னிடம் பேசும் போது, “நீங்கள் அடுத்தப் படம் நடித்தால், என் இயக்கத்தில் தான் நடிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்த படமும் கிடையாது. அதற்கு பின்பு தெரியவில்லை, அதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும், எனினும் படம் நடித்தால் அடுத்து உங்களுடன் தான் என்று மாரி செல்வராஜுக்கு உறுதியளித்துள்ளேன் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.