#JUST IN : நடிகை வனிதாவின் கணவர் பீட்டர் பால் திடீர் மரணம்..!!

வனிதா விஜயகுமாரை நான்காவதாக திருமணம் செய்த பீட்டர் பால் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

1995-ம் ஆண்டு வெளியான ‘சந்திரலேகா’ படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் வனிதா. இவர் நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மூத்த மகளாவார். தொடர்ந்து அவர் நடித்த படங்கள் பெரியளவில் வெற்றி அடையாமல் போனது. இதையடுத்து 2000-ம் ஆண்டு தனது 19-வது வயதில் டி.வி. நடிகர் ஆகாஷை திருமணம் செய்துகொண்டார்.இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். 

கடந்த 2006-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக ஆகாஷை பிரிந்த வனிதா, 2007-ம் ஆண்டு ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் உள்ளது. எனினும் கருத்து வேறுபாடு காரணமாக 2012-ம் ஆண்டு இரண்டாவது கணவரிடம் இருந்து வனிதா விவாகரத்து பெற்றார்.

இதையடுத்து 2013-ம் ஆண்டு நடன இயக்குநர் ராபர்டுடன் வனிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் அப்போது பேட்டிகளில் குறிப்பிட்டனர். 2015-ம் ஆண்டுக்கு பிறகு அவரையும் வனிதா பிரிந்துவிட்டார். அப்போது ஊடகங்களுக்கு பேட்டியளித்த ராபர்ட், தான் வனிதாவை திருமணம் செய்யவில்லை என்று கூறினார். ஆனால் வனிதா தனக்கும் ராபர்ட்டுக்கும் திருமணம் நடந்ததாக கூறினார். இந்த விவகாரத்தில் உண்மை எது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

அதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கெடுத்த வனிதா விஜயகுமாருக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவானது. அந்நிகழ்ச்சியை விட்டு அவர் எலிமினேட்டான நிலையில், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். அப்போது கிராஃபிக்ஸ் டிசைனர் பீட்டர் பால் என்பவருடன் வனிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அது காதலாக மாறியதை அடுத்து, வனிதாவின் 2 மகள்களும் வனிதா மற்றும் பீட்டர் பாலுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

அந்த திருமணம் கிறிஸ்துவ முறைப்படி நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் மிகவும் வைரலாகின. ஆனால் பீட்டர் பாலுக்கு கடுமையான குடிப்பழக்கம் இருந்தது. இதனால் திருமணமான சில மாதங்களிலேயே வனிதா அவரையும் விட்டு பிரிந்துவிட்டார். இப்படியான நிலையில் பீட்டர் பால் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.