விஜய் பட ஒளிப்பதிவாளரின் தாயார் மரணம்..!! 

 

2009-ல் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான ‘ஈரம்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் மனோஜ் பரமஹம்சா. தெலுங்கு திரைப்பட இயக்குநர் யு.வி.பாபுவின் மகன். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘நண்பன்’, ‘ராதே ஷ்யாம்’, ‘பீஸ்ட்’ மற்றும் கெளதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் நீண்ட கால தயாரிப்பில் இருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ உட்பட பல மறக்கமுடியாத படங்களில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.

தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், விஜய் நடிக்கும் லியோ படத்தின் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் நடைபெற்று வந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த மாத இறுதியில் படக்குழுவினர் அனைவரும் தனிவிமானம் மூலம் காஷ்மீருக்கு சென்றனர். 

பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து அங்கு ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த லியோ பட ஷூட்டிங் தற்போது நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏனெனில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் தாயார் உடல்நலக்குறைவால் மரணமடைந்ததன் காரணமாக அவர் சென்னை திரும்பியதால், லியோ படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தாயாரின் இறுதிச்சடங்கு முடிந்ததும் மனோஜ் பரமஹம்சா மீண்டும் காஷ்மீருக்கு திரும்பிச் சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.