சிறைக் கைதிகளுக்கான நடிகர் விஜய் சேதுபதி செய்த உதவி..!!

சிறைச்சாலைகளில் இயங்கும் நூலகங்களுக்கு என்று நடிகர் விஜய் சேதுபதி 1000 புத்தகங்களை நன்கொடையாக அளித்துள்ளார்.
 
 

தமிழ்நாட்டில் இருக்கும் சிறைச்சாலைகளில் நூலகங்கள் அமைத்திட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக மதுரை சிறையில் இயங்கும் நூலகத்துக்கு டி.ஐ.ஜி பழனி, கூடுதல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் உள்ளிட்டோர் புத்தகங்களை சேகரித்து வருகின்றனர். 

அதற்காக பலரும் இலவசமாக நூல்களை வழங்கி வருகின்றனர். அண்மையில் நடிகர் விஜய் சேதுபதி மதுரை மத்திய சிறைக்கு சென்றார். அங்கு சிறைக் கைதிகளுக்கான நூலகத்திற்கு 1000 புத்தகங்களை நன்கொடையாக அவர் வழங்கினார்.

இதுகுறித்து பேசிய விஜய் சேதுபதி, கைதிகளை நல்வழிப்படுத்தும் இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன். இந்த திட்டத்துக்காக நிறைய புத்தகங்களை வழங்கவுள்ளேன். தற்போது உசிலம்பட்டி ஷூட்டிங்கில் இருப்பதால், முதற்கட்டமாக 1000 புத்தகங்களை மட்டும் வழங்குகிறேன்.

நான் கொடுத்துள்ள புத்தகங்கள் அனைத்தும் கைதிகளை நல்வழிப்படுத்தும் போதனை புத்தகங்களாக இருக்கும். சிறைத்துறை அதிகாரிகளின் இந்த முயற்சிக்கு பாராட்டு கிடைக்கும் வகையில், இத்திடம் வெற்றி பெற வேண்டும் என்று விஜய் சேதுபதி கூறினார்.