விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தின் ரிலீஸ் முடிவு..!

 

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘துக்ளக் தர்பார்’ படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் வெளியீடு செய்வதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘துக்ளக் தர்பார்’. இதனுடைய பணிகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே முடிக்கப்பட்டுவிட்டன. ஆனால் படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்த படத்தில் மஞ்சிமா மோகன் மற்றும் ராஷி கண்ணா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளார். நடிகர் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது பார்த்திபன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் இரண்டாவது படமாகும். முன்னதாக ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், படத்தை திரையிட முடியவில்லை. இன்னும் இதே நிலை தான் தொடர்கிறது.

அதன்காரணமாக ‘துக்ளக் தர்பார்’ படம் சன் டிவியில் நேரடியாக வெளிவருகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று இப்படம் வெளியாகலாம் என தெரிகிறது. அதேநாள் மாலையில் இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.