விரைவில் உருவாகும் ஆர்.ஆர்.ஆர் 2 படம்- விஜயேந்திர பிரசாத் தகவல்..!!

விரைவில் ஹாலிவுட் தரத்தில் ஆர்.ஆர்.ஆர் 2 உருவாகவுள்ளதாகவும், ஆனால் அந்த படத்தை எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கமாட்டார் எனவும் விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.
 

கடந்தாண்டு இந்திய ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானதை தொடர்ந்து, இப்படத்தை உலகமே பார்த்தது. அதன்மூலம் சர்வதேசளவில் பல விருதுப் போட்டிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

திரைப்படத் துறையில் வழங்கப்படும் இரண்டாவது பெரிய விருந்தான கோல்டன் குளோப் விருதை இப்படம் வென்றது. இதையடுத்து நடப்பாண்டு நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த பாடலுக்கான பிரிவிலும் இப்படம் விருது வென்றது.

இதையடுத்து பல்வேறு நாடுகளில் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு சிறப்புத் திரையிடல் நடத்தப்பட்டது. இதனால் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினரும் இயக்குநர் ராஜமவுலியும் உலகளவில் பிரபலமான திரைக்கலைஞர்களாக மாறியுள்ளனர்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ராஜமவுலியின் தந்தையும், திரைக்கதை எழுத்தாளருமான விஜயேந்திர பிரசாத் ஆர்.ஆர்.ஆர் 2 உருவாவது குறித்து பேசியுள்ளார். அந்த நேர்காணலில் விரைவில் ஆர்.ஆர்.ஆர் 2 படம் உருவாகும், அதிலும் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் தான் நடிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால் அந்த படத்தை எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கமாட்டார். ஒரு ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் ஆர்.ஆர்.ஆர் 2 படத்தை தயாரிக்கும், அதேபோன்று படத்தையும் ஒரு ஹாலிவுட் இயக்குநர் தான் இயக்குவார் என்று அவர் கூறியுள்ளார். மேலும் ராஜமவுலி தற்போது மகேஷ் பாபு படத்தில் பிஸியாக உள்ளார். அந்த படத்தின் பணிகள் முடிந்ததும், அவர் தனது கனவுப் படமான மஹாபாரதம் கதையை படமாக்குவார் என்று விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார்.