”ராவணனாக நடிக்க முடியாது” ஒதுங்கிக்கொண்ட யாஷ்..!!

இந்தியில் தயாராகும் ராமாயனக் கதையில் ராவணனாக நடிக்க ஒப்புக்கொண்டு, பிறகு அந்த படத்தில் இருந்து யாஷ் பின் வாங்கிவிட்டதாக தகவல்கள் கூறப்படுகின்றன.
 

கன்னடத்தில் வெளியான கே.ஜி.எஃப் படங்கள் மூலமாக இந்தியளவில் பிரபலமானவர் யாஷ். இவர் இன்னும் தனது அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிடாமல் உள்ளார். அந்த வகையில் அவர் அடுத்ததாக பாலிவுட்டில் தயாராகும் ராமாயனம் சார்ந்த கதையில் நடிப்பதாக இருந்தது.

நிலேஷ் திவாரி என்பவர் இயக்கும் படத்தில் ராமனாக ரன்பீர் கபூரும், சீதையாக ஆலியா பட்டும் நடிப்பதாக கூறப்படுகிறது. முக்கியத்துவம் கொண்ட ராவணன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் அந்த படத்தில் இருந்து யாஷ் தற்போது வெளியேறிவிட்டார். இதுகுறித்து அவருடைய குழு வெளியிட்டுள்ள தகவலில், ராமனாக நடிப்பதை விடவும் ராவணனனாக நடிப்பது சவாலானது என்று எண்ணி, இப்படத்தில் நடிக்க யாஷ் தயாராக இருந்தார். ஆனால் அவர் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்தால், யாஷின் ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்று அவரது குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்தியில் உருவாகும் ராமாயனக் கதை சார்ந்த படத்துக்கு கங்கனா ரணாவத் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார். வாரிசு நடிகரான ரன்பீர் கபூர் ராமனாக நடிப்பதற்கு மிகுந்த எதிர்ப்பு காட்டினார். அதேசமயத்தில் எந்தவிதமான சினிமா பின்புலமும் இல்லாமல் ஹீரோவாக ஜெயித்துக் காட்டிய யாஷுக்கு அவர் வாழ்த்து கூறி இருந்தார். அதை தொடர்ந்து தற்போது படத்தில் இருந்து யாஷ் வெளியேறியுள்ளார்.