பாடகியின் மகளுக்கு பாலியல் துன்புறத்தல் வழக்கில் 4 பேர் கைது..!

 

பிரபல பாடகியின் 15 வயது மகளுக்கு 8 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட புகாரில் தலைமறைவாக இருந்து பாதிரியார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், சொத்துப் பிரச்னைக்காகவே பாடகி பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக பாடகியின் தாயார் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல பாடகி தன்னுடைய மகளை சென்னையிலுள்ள தங்கை வீட்டில் தங்க வைத்துள்ளார். அப்போது தனது மகளுக்கு தங்கையின் கணவர் உட்பட உறவினர்கள் மூன்று பேரும் பாதிரியார் ஹென்றி என்பவரும் சேர்ந்து 8 ஆண்டுகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்ததாக போலீஸில் பாடகி புகார் தெரிவித்தார். 

அதை தொடர்ந்து பாடகியின் புகாரை கீழ்பாக்கம் மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தலைமறைவான பாதிரியார் ஹென்றி உட்பட பாடகியின் தங்கை, அவருடைய கணவர் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர்களிடம் விரைவில் புகார் தொடர்பாக விசாரணை நடைபெறவுள்ள நிலையில், சொத்துப் பிரச்னைக்காகவே தன்னுடைய இரண்டாவது மகள் மற்றும் அவருடைய குடும்பத்தார் மீது பாடகி பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக கூறி பாடகியின் தாயார் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் பாடகி தரப்பு நியாயங்களையும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.