டிராக்டரில் இருந்து தவறி விழுந்த 9-ம் வகுப்பு மாணவன் சக்கரத்தில் சிக்கி பலி!

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கீழ நிம்மேலி கிராமத்தில் வசித்து வருபவர் உதயசூரியன். இவரது மனைவி வனிதா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களின், இரண்டாவது மகன் சுவேதன் (14), திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கைப்பந்து வீரரான சுவேதன் படிப்பிலும் சிறந்து விளங்குபவர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இவன் கீழநெம்மேலி வயல்வெளியில் உள்ள பாலத்தின் அருகில் நின்று கொண்டிருந்தான். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாண்டியன்(50) என்பவர், டிராக்டரில் நெல் ஏற்றிக்கொண்டு காய வைப்பதற்காக வந்தார். டிராக்டரை அந்த பகுதியில் நிறுத்தி விட்டு டிராக்டரில் இருந்து கீழே இறங்கி சென்றார்.

அப்போது டிராக்டர் திடீரென நகர்ந்து சென்றது. இதனை கண்ட மாணவன் சுவேதன், டிராக்டரை நிறுத்துவதற்காக டிராக்டர் மீது ஏறி பிரேக்கை அழுத்த முயன்றான். அப்போது நிலைதடுமாறி சுவேதன் டிராக்டரில் இருந்து கீழே விழுந்தான். அவன் டிராக்டரில் இருந்து கீழே விழுந்த நேரத்தில் டிராக்டர் நகர்ந்தது. இதில் டிராக்டர் சக்கரம் மாணவன் மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடுவூர் போலீசார் சிறுவனின் பெற்றோருக்கு தகவலளித்துடன், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டிராக்டரின் சக்கரத்தில் சிறுவனின் தலை நசுங்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.