தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை!! பெண் குழந்தை பிறந்ததால் விபரீதம்!!

 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் வசித்து வருபவர் சேகர். இவரது மனைவி சிவகாமி (55). இவர் விவசாயம் செய்து வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு சிவகாமியின் கணவர் சேகர் இறந்து விட்டார். மேலும் சந்தோஷ், சுதாகர், முரளி ஆகிய மூன்று மகன்களுடன் சிவகாமி வசித்து வந்தார். 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு சந்தோஷ், சுதாகர் ஆகிய 2 மகன்களும் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 3-வது மகனான முரளி (27) என்பவருக்கு கடந்த ஆண்டு இந்துஜா(25) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்துஜா கர்ப்பமாக இருந்து வந்த நிலையில், பிரசவத்திற்காக புத்துக்கோவிலில் உள்ள தாய் மனோன்மணி வீட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. 

இந்நிலையில், நேற்று முன்தினம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் கணவர் முரளி மற்றும் தாயார் சிவகாமி ஆகிய இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பெண் குழந்தையை பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த தாய், மகன் இருவரும் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை போலீசார் உயிரிழந்த தாய் சிவகாமி, மகன் முரளி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.