காரை ஏற்றிக் காவலரை கொலை செய்த சகோதரியின் கணவர்!!
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த வடக்கு செய்யூர் கிராமத்தில் வசித்து வந்தவர் காமேஷ்குமார் (37). சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் இவருக்கு செய்யூர் பகுதியில் சொந்தமாக விளை நிலங்கள் உள்ளன. கடந்த ஒரு வாரமாக காமேஷ்குமாருக்கும் அவர் அக்காவின் கணவர் மதன் பிரபு என்பவருக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று காலை 11 மணி அளவில் செய்யூரில் உள்ள தனது விவசாய நிலத்தை பார்வையிட வந்தார். நிலத்தைப் பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். செய்யூர் சால்ட் காலனிக்கு செல்லும் வழியில் சாலையோரத்தில் நின்று கொண்டு நண்பருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, சால்ட் காலனியிலிருந்து மதன் பிரபு அவரது நண்பர்களுடன் காரில் செய்யூர் நோக்கி வந்துள்ளார்.
அங்கே சாலையோரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்த காமேஷ் குமாரை கண்ட மதன் பிரபு, அவர் மீது காரை வேகமாக ஏற்றியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காமேஷ் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதால், காரின் முன்பகுதி சிதைந்து பேட்டரியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது. காரை இயக்க முடியாததால் காரை அங்கேயே நிறுத்திய மதன் பிரபு, தனது நண்பர்களுடன் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செய்யூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். மேலும் காமேஷ்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காமேஷ் குமாரின் மனைவி ரேகா கொடுத்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாக இருக்கும், மதன் பிரபு மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.