காரில் அமர்ந்து பர்கர் சாப்பிட்ட இளைஞர்; துப்பாக்கியால் சுட்ட அமெரிக்கக் காவலர்!

 

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் மாநிலத்தின் சான் அன்டோனியோ நகரத்தைச் சேர்ந்தவர் எரிக் கான்டு (17). இவர் அங்குள்ள மெக்டொனால்டு கார் பார்க்கிங்கில் காரில் அமர்ந்துகொண்டு பர்கர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த ஜேம்ஸ் பிரென்னாண்ட் எனும் காவலர் காரிலிருந்து இறங்குமாறு அவருக்கு உத்தரவிட்டார். எதற்காக இறங்க வேண்டும் என்று எரிக் கான்டு கேட்டபோது காவலர் ஜேம்ஸ் பிரென்னாண்ட் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். 

அதிர்ச்சியில் பயந்துபோன அந்த இளைஞர் காரைக் கிளப்பி அங்கிருந்து செல்ல முயன்றார் அப்போது காவலர் தொடர்ந்து துப்பாக்கியால் பல முறை சுட்டார். அமெரிக்க நேரப்படி நேற்று இரவு 10.45 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த எரிக் கான்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தொலைபேசியில் தனக்கு வந்த புகாரை அடுத்து அந்த இளைஞரைத் தேடி அங்கு வந்ததாகவும், அவர் தன்னைத் தாக்க முயன்றதாலேயே அவரை நோக்கிச் சுட்டதாகவும் காவலர் ஜேம்ஸ் பிரென்னாண்ட் கூறியிருந்தார். எனினும், அவரது சீருடையில் பொருத்தப்பட்டிருந்த ‘பாடி கேமரா’வில் பதிவான காட்சிகள், உண்மையில் நடந்தது என்ன என்பதை வெட்டவெளிச்சமாக்கிவிட்டன. இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்தச் சம்பவத்துக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில், காவலர் ஜேம்ஸ் பிரென்னாண்ட் பணிநீக்கம் செய்யப்பட்டார். துப்பாக்கிச்சூடு நடந்தபோது அந்தக் காரில் 17 வயது இளம் பெண்ணும் அமர்ந்திருந்தார். நல்வாய்ப்பாக அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.