டிராக்டரை முந்த முயற்சித்து குழந்தையுடன் தாய் பலியான சோகம்!!

 

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பூந்துறைசேமூரைச் சேர்ந்தவர் கோமதி என்பவர் தனது 4 வயது குழந்தை சுகுதியுடன் நேற்று இரவு மொடக்குறிச்சி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பட்டறை வேலம்பாளையம் அருகே சென்றபோது, கோமதி கரும்பு லேடு ஏற்றி சென்றுகொண்டிருந்த டிராக்டரை முந்த முயன்று உள்ளார்.

அப்போது எதிர்திசையில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க முயன்றபோது கோமதி நிலைதடுமாறி உள்ளார்.

இதனால் கோமதி டிராக்டரின் இடையில் கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் டிராக்டரின் சக்கரம் கோமதி மற்றும் அவரது மகள் சுகுதி மீது ஏறி இறங்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி போலீசார், உடல்களை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.