திருவள்ளூரில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்கள் மீது தாக்குதல்!! 

 

கொண்டஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் தாஸ். இவருக்கும் கூவம் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் என்பவருக்கும் நீண்டநாட்களாக பகை இருந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தாஸின் ஆதரவாளர்கள் நேற்றிரவு கூவம் பகுதியில் உள்ள சார்லஸின் வீட்டிற்கு இரும்பு கம்பி மற்றும் உருட்டுக் கட்டைகளுடன் சென்றனர்.

அப்போது வீட்டில் இருந்த சார்லஸ் மற்றும் அவரது மனைவி விக்டோரியா, மகள் சவிதா, மகன் சாருகேஷ் ஆகியோரை இரும்பு கம்பி மற்றும் உருட்டு கட்டைகளால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும், வீட்டு உபயோக பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதில் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தின் காரணமாக விக்டோரியா மற்றும் சவிதா ஆகியோரை திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சார்லஸ் வீட்ட்டுக்குள் புகுந்து பொருட்களை மர்ம கும்பல் அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக சார்லஸின் சகோதரர் சத்தியமூர்த்தி மப்பேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மப்பேடு போலீசார் சார்லஸ் வீட்டில் உள்ள சிசிடிவி பதிவைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் வீட்டு பெண்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.