நடிகர் சதீஷின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு..!! பெண்களின் ஆடைகள் குறித்து இப்படி பேசலாமா ?

 
1

யுவன் இயக்கத்தில் பாலிவுட் நடிகை சன்னிலியோன், சதீஷ், தர்ஷா குப்தா, ஜி.பி.முத்து ஆகியோர் நடித்துள்ள படம் 'ஓ மை கோஸ்ட்' வெளிவர உள்ளது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகை சன்னிலியோன் சேலை அணிந்திருந்தார்.

இது குறித்து மேடையில் பேசிய நடிகர் சதீஷ், வெளிநாட்டில் இருந்து வந்துள்ள நடிகை சன்னிலியோன் நமது கலாச்சாரப்படி சேலை அணிந்து வந்திருக்கிறார். ஆனால் நடிகை தர்ஷா குப்தா கோயம்புத்தூரை சேர்ந்தவராக இருந்தாலும் எப்படி உடை அணிந்து வந்துள்ளார்'' என்று பேசினார். இதைத்தொடர்ந்து சதீஷின் பேச்சுக்கு பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்த பதிவுகளின் எப்படி உடை அணிய வேண்டும் என்பது அவரவருடைய தனிப்பட்ட விருப்பம் என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பாடகி சின்மயி, சதீஷின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இணையத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ''இத்தனை பேர் உள்ள ஒரு பொது வெளியில் ஒரு பெண்ணின் ஆடை குறித்து சுட்டிக்காட்டி பேசுவது தவறு. இது ஒன்றும் காமெடி கிடையாது. ஆண்கள் இதுபோன்ற செயல்களை எப்போதுதான் நிறுத்துவார்கள்'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


 

இதேபோன்று இயக்குனர் நவீனும் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, ''சன்னிலியோன் திரையில் ஆடையின்றி தோன்றுவதும், கோயம்புத்தூர் பெண் மேடையில் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதும் அந்த பெண்களின் தனிப்பட்ட உரிமை. சதீஷ் சகோ, உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான். மாற்றமே கலாச்சாரம்'' என்று கருத்து தெரிவித்துள்ளார்.


இதைத்தொடர்ந்து நடிகர் சதீஷின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பி வருவது திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web