வல்லக்கோட்டை பட நாயகிக்கு விரைவில் திருமணம்... மாப்பிள்ளையும் ஒரு பிரபல நடிகர் தான்..!!
2007-ல் துளு மொழியில் வெளியான ‘பாடி’ என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஹரிப்பிரியா. இதையடுத்து 2008-ல் வெளியான ‘மனசுகல மது மதுரா’ படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிப் படங்களில் நடித்தார்.
தமிழில் ‘கனகவேல் காக்க’, ‘வல்லக்கோட்டை’, ‘முரண்’, ‘நான் மிருகமாய் மாற’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கன்னடப் படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இவருக்கும் கன்னட நடிகரும் பாடகருமான வசிஷ்டா சிம்ஹாவுடன் டேட்டிங் செய்வதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில், சிங்கம் கையில் ஒரு பெண் குழந்தை இருப்பது போன்ற ஒரு பதிவை வெளியிட்டு, ‘அன்பே, நான் உன் கையில் இருக்கிறேன்’ என்று கூறியிருந்தார். அதற்கு வசிஷ்டா சிம்ஹா பதிலளிக்கையில், ‘நான் எப்போதும் உன் நிழலாக இருக்கிறேன்’ என்று பதிவிட்டு, தங்கள் காதலை உறுதி செய்தார்.
இதையடுத்து இருவீட்டு பெற்றோர் சம்மத்துடன் ஹரிப்பிரியா, வசிஷ்டா சிம்ஹா திருமண நிச்சயதார்த்தம் கடந்த டிசம்பர் 3-ம் தேதி பெங்களூருவில் நடந்தது. எளிய முறையில் நடந்த இந்நிகழ்ச்சியில் இருவீட்டு உறவினர்கள் கலந்துகொண்டனர். பிறகு ஹரிப்பிரியா, வசிஷ்டா சிம்ஹா நிச்சயதார்த்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், அவர்களது காதல் திருமணம் வரும் 26-ம் தேதி மைசூரு ஸ்ரீகணபதி சச்சிதானந்தா ஆசிரமத்தில் எளிய முறையில் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகும் ஹரிப்பிரியா தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. ரசிகர்களும் திரையுலகினரும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.