நடிகர் மம்முட்டியின் தாயார் மரணம்..!!
![1](https://ciniexpress.com/static/c1e/client/77058/uploaded/6b9d381faefbb9d6b47aa73c4b543678.webp)
1971-ல் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் வெளியான ‘அனுபவங்கள் பாலிச்சகள்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் மம்முட்டி. அதன்பின், 1980-ம் ஆண்டு கே. ஜி. ஜார்ஜ் எழுதி இயக்கிய மேளா திரைப்படத்தில் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
1990-ல் வெளியான ‘மௌனம் சம்மதம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, தமிழில் அழகன், தளபதி, மக்கள் ஆட்சி, மறுமலர்ச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதுவரை 400 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
இவர், மூன்று தேசியத் திரைப்பட விருதுகள், 7 கேரள மாநிலத் திரைப்பட விருதுகள் மற்றும் 13 பிலிம்பேர் விருதுகள் தென்னக விருதுகள் உட்பட பல பாராட்டுகளைப் பெற்றவர். திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசு அவருக்கு 1998-ல் பத்மஸ்ரீ விருது வழங்கியது.
இந்த நிலையில் நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் இன்று காலை காலமானார். பாத்திமா இஸ்மாயில், வயது முதிர்வு நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை செம்ப் முஸ்லிம் ஜமியத் பள்ளிவாசலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகினர் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு திரையுலகினரும் நடிகர் மம்முட்டிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.