படிக்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்த நடிகர் முத்துக்காளை : 58 வயதில் 3 பட்டங்கள்..! 

 
1

58 வயதாகும் நடிகர் முத்துக்காளை ஸ்டண்ட் கலைஞராக பணியாற்ற வேண்டும் என்ற கனவோடு சினிமாவிற்குள் நுழைந்தார். ஆனால் காலப்போக்கில் நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்திருந்தார். 1997ல் வெளியான பொன்மனம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான முத்துக்காளை அதன் பிறகு எண்ணற்ற படங்களில் தற்போது வரை நடித்து வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு குடிப்பழக்கத்தில் மிகவும் அடிமையான முத்துக்காளை தற்போது படிப்பில் சிறந்து விளங்கி மக்களை ஆச்சரியப்படவைத்திருக்கிறார். திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலமாக மூன்று பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கும் முத்துக்காளையை இணையவாசிகளும் சினிமா ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்தி வருகின்றனர். முன்னதாக இரண்டு பட்டன்களை பெற்றிருந்த முத்துக்களை சமீபத்தில் அவரது மூன்றாவது பட்டத்தை முடித்திருக்கிறார்.

அதனை தொடர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்திருக்கிறார் முத்துக்காளை, அந்த வீடியோவில், என்னுடைய சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருக்கும் சங்கம்பட்டி என்ற கிராமம். சிறுவயதிலிருந்தே விளையாட்டுத்தனம் அதிகமாக இருந்ததால் படிப்பின்மீது கவனம் செலுத்த முடியவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக்கு சரியாக போக முடியாமல், பாடப் புத்தகம் வாங்க காசில்லாமல், வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

ஸ்டண்ட் நடிகராக வேலை தேடி சென்னைக்கு வந்த பிறகு படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. கல்வியா ? செல்வமா ? வீரமா ? என்ற பாடல் வரியைப் போலவே முதலில் ஸ்டண்ட் தொழில் மூலம், வீரத்தை கற்றுக்கொண்டு அதன் மூலமாக வரும் பணத்தை சேர்த்து கல்வியை பயில வேண்டும் என முடிவெடுத்தேன். அப்படி கல்வியை பெற எனக்கு 50 வயது ஆகிவிட்டது. படிக்க வேண்டிய வயதில் படித்து விடுங்கள். எதை இழந்தாலும் கல்வியை மட்டும் இழக்காதீர்கள். கல்வி உங்கள் தலைமுறையையே காப்பாற்றும்.

குடிப்பழக்கத்தில் அடிமையாக இருந்தபோது அதிலிருந்து விடுபட செய்தது படிப்புதான். இளமையில் எதையெல்லாம் இழந்தேனோ, அதையெல்லாம் மீட்டெடுக்க ஆசைப்பட்டேன். அதன் ஒரு படியாக படிக்க வேண்டும் என்ற ஆசையை இப்பொழுது நிறைவு செய்து இருக்கிறேன். நான் படிப்பதை பார்த்து எண்ணற்ற பேர் கேலி செய்திருக்கிறார்கள். இந்த வயதில் படித்து என்ன செய்யப் போகிறீர்கள் என கேட்டிருக்கிறார்கள். ஆனாலும் படித்தே ஆகவேண்டும் என்று தமிழ், தமிழ் இலக்கியம், வரலாறு ஆகிய மூன்று பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கிறேன்.

கோடிக்கணக்கான சொத்து வைத்திருந்தாலும் இவ்வளவு பெரிய சந்தோஷம் எனக்கு கிடைத்திருக்காது. விவேகானந்தர் சொல்வது போல படிப்பு தான் நாட்டை உயர்த்தும் என முத்துக்காளை வெளியிட்டு இருக்கும் வீடியோவில் பேசியிருக்கிறார்.

From Around the web