திருவின் குரல் டிரெய்லர் வெளியீடு- மாறுபட்ட கதாபாத்திரத்தில் அருள்நிதி
தமிழ் சினிமாவில் சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருபவர் அருள்நிதி. அவருடைய நடிப்பில் கடந்தாண்டு டி பிளாக், தேஜாவு, டைரி போன்ற படங்கள் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன.
இப்போது அவர் டிமாண்டி காலனி 2, கழுவேத்தி மூர்க்கன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல் அவர் அண்மையில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்துக்கு திருவின் குரல் என்று பெயரிடப்பட்டது.
இப்படத்தில் பாரதிராஜா, ஆத்மிகா, சுபத்ரா ராபர்ட், மோனேகா சிவா, அஷ்ரப், ஏ.ஆர்.ஜீவா, ஹரிஷ் சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாம்.சி.எஸ் இசையமைப்பில் உருவாகி வரும் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
திருவின் குரல் படத்தில் வாய்பேச முடியாத, செவித்திறன் குறைபாடு கொண்ட கதாபாத்திரத்தில் அருள் நிதி நடித்துள்ளார். மருத்துவத் துறையில் நடக்கும் முறைகேடுகளை மையமாக கொண்ட இப்படம் த்ரில்லர் பாணியில் தயாராகியுள்ளது. வரும் ஏப்ரல் 14-ம் தேதி ’திருவின் குரல்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.