அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம்!

 
1

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இருமல், சளி மற்றும் தொண்டை வலி பாதிப்பு அவருக்கு இருந்த நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.அவரது உடல் நிலை சற்று தேறிய நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் தேதி விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி அன்று உடல் நிலைக்குறைவு காரணமாக மீண்டும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் நேற்று முன்தினம்(டிசம்பர் 28) 6:10 மணிக்கு பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட விஜயகாந்த் உடல், இன்று காலையில் சென்னை தீவுத்திடலுக்குக் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான விஜயகாந்த் ரசிகர்களும் தொண்டர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உடல், நேற்று தீவுத்திடலில் வைக்கப்பட்டது. பின்னர், ஊர்வலமாக சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்குப் பொதுமக்கள் வழிநெடுக நின்று அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்வதற்காக தீவுத்திடலில் இருந்து விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் நண்பகல் 2:45 மணியளவில் தொடங்கி மாலை 5:30 மணிக்குமேல் வந்து சேர்ந்தது. கேப்டன் விஜயகாந்துக்கு இறுதி மரியாதை செலுத்த தேமுதிக அலுவலகத்தில் பிரபலங்கள் பலர் குவிந்தனர். குறிப்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, தெலங்கானா ஆளுநர் தமிழிசை, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அங்கிருந்தனர்.

விஜயகாந்தின் இறுதிச் சடங்கினை காண பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தின் வாயிலில் பெரிய எல்.இ.டி திரை அமைக்கப்பட்டிருந்தது. ஏனெனில், இறுதிச்சடங்கு நடக்கும் இடம் மிகவும் குறுகிய இடமாக இருப்பதாலும், முக்கிய நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாலும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இறுதியாக விஜயகாந்தின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. பின், விஜயகாந்தின் குடும்ப வழக்கப்படி, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

From Around the web