‘தண்டேல்’ படத்தின் வசூல் ரூ.100 கோடி கடந்து அசத்தல்..!

சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தண்டேல்’. கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் உலகமெங்கும் பிப்ரவரி 7-ம் தேதி வெளியானது.
இப்படத்துக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால் தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.
உலகளவில் முதல் நாளில் ரூ.21 கோடி, இரண்டு நாட்களில் ரூ.41.20 கோடி என வசூல் அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால் விரைவில் ரூ.100 கோடி வசூலைத் தாண்டும் என கருதப்பட்டது. அதன்படி உலகளவில் மொத்த வசூலில் ரூ.100 கோடியை கடந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
நாக சைதன்யா திரையுலக வாழ்வில் அதிக வசூல் செய்த படம் ‘தண்டேல்’ என்ற சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறது. ‘தண்டேல்’ படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும். இதன் பாடல்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.